செவ்வாய், 11 அக்டோபர், 2016

தமிழகத்தின் ஒப்பற்ற தியாகி சங்கரலிங்கநாடாரின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்.தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகத்திற்கு தியாகி சங்கரலிங்கனார் திறந்த நிலை பல்கலை கழகம் என பெயர் சூட்ட வேண்டும் என தமிழ்நாடு நாடார் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

13-10-2016 தியாகி சங்கரலிங்கனாரின் நினைவுநாள்

சங்கரலிங்க நாடார் மதராசு மாநிலம் (மெட்ராஸ் ஸ்டேட்) என்று அழைக்கப்பட்ட பகுதிக்கு ”தமிழ்நாடு” என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட ஒரு உண்மையான போராளி.

உலகில் அதிக நாட்கள் 76 நாட்கள் கொள்கைக்காக உண்ணாவிரதமிருந்து உயிர் விட்டவர் தமிழ்நாடு பெயருக்கு சொந்தமான சங்கரலிங்க நாடார்

 தென்பாண்டிநாட்டின் வணிகக்களமான விருதுநகரில்26.01 1895ஆம் ஆண்டு பிறந்தார்.

 1900இல் திருமால் நாடார் ஓலைப்பள்ளிலும், 1901 இல் சுவீடிஷ் மிஷன் ஞானமாணிக்கம் உபதேசியார் பள்ளிலும், 1902 இல் சதிரிய வித்தியா கல்விச் சாலையிலும் பயின்றார். இவரது கல்வியானது எட்டாம் வகுப்புடன் முடிவடைந்தது.

தியாகி சங்கரலிங்கனார் இளமையில் நாட்டு விடுதலையில் நாட்டமும், ஈடுபாடும் கொண்டவராக விளங்கினார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியின் சுதந்திரப் போராட்ட உரையினைக் கேட்டு விடுதலை உணர்வு பெற்றார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் 1908 ஆம் ஆண்டு முதல் தன்னை இணைத்துக் கொண்டார்.

 விருதுநகரில் ‘பங்கஜ விலாச வித்யாபிவர்த்திச் சங்கம்’ என்னும் அமைப்பை 1914 ஆம் ஆண்டு ஏற்படுத்தி, பெண் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு சுவாமி திருவாலவாயர் செயல்பட்டார். சங்கரலிங்கனார் அச்சங்கத்தின் செயலாளராகத் தொண்டாற்றினார்.

சங்கரலிங்கனார் செந்தியம்மாள் என்பவரை 1915 ஆம் ஆண்டு வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார். தன் முதல் மகளுக்கு பங்கஜம் என்று பெயர் சூட்டினார். சங்கரலிங்கனார் ‘மாதர் கடமை’ என்னும் நூலை எழுதி 1920 ஆம் ஆண்டு வெளியிட்டார். நூல் வெளியீட்டைத் தொடர்ந்து சங்கரலிங்கனாருக்கு மூதறிஞர் இராஜாஜியின் தொடர்பும் நட்பும் ஏற்பட்டது.

 அதே ஆண்டு திருநெல்வேலியில் நடைபெற்ற சென்னை மாகாண அரசியல் மாநாட்டில் கலந்து கொண்டார். அம்மாநாட்டில் இராஜாஜியை சந்தித்தது உரையாடினார். அவரும் அவரது குடும்பத்தினரும் கதரே உடுத்துவதென 1922 ஆம் ஆண்டு முதல் முடிவு செய்தனர். கதர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு ‘விருதுநகர் கதர் வஸ்திராலயம்’ என்னும் கதர்க் கடையைத் திறந்தார். கதர் விற்பனையை அவர் அதிகமாகச் செய்ததைப் பாராட்டி 26.04.1926 இல் சுதேசமித்திரன் இதழ் ஒரு பாராட்டுச் செய்தி வெளியிட்டது.

அப்போது சென்னை மாகாணத்தின் கதர் வாரியத் தலைவராக  பெரியாரும், செயலாளராக எஸ்.இராமநாதனும் தொண்டாற்றினர்! விருதுநகருக்கு  பெரியாரை 1924 ஆம் ஆண்டு அழைத்து, த.இரத்தினசாமி நாடார் நினைவு வாசக சாலை சார்பாக பொதுக் கூட்டம் நடத்தினார்.

 காந்தியடிகளை 16.02.1925 பம்பாயில் சந்தித்தார். அன்று முதல் நாள்தோறும் நூல் நூற்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ‘மகாத்மா காந்தி கதர் வஸ்திராலயா’ என்னும் கதர்க்கடையில் பணியாற்றினார். 1927 ஆம் ஆண்டு காந்தியடிகள் விருதுநகர் வருகை புரிந்த போது சிறப்பான ஏற்பாடுகளை சங்கரலிங்கனார் செய்தார். காந்திஜி தங்கிய கிராமத்திற்கு நகராட்சியின் ஒப்புதல் பெற்று ‘காந்தி தங்கல்’ என்று பெயர் சூட்டினார். காந்திஜி உப்புச் சத்தியாகிரகத்துக்காக 1930 ஆம் ஆண்டு தண்டியாத்திரை தொடங்கியபோது சங்கரலிங்கனார் மூன்று நாட்கள் காந்தியடிகளுடன் பயணம் மேற்கொண்டார்.

 காந்தியடிகளின் தலைமையில் 1930-31 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டக் காலத்தில், சங்கரலிங்கனார் சென்னை, திருச்செங்கோடு, ஈரோடு, காரைக்குடி ஆகிய நகரங்களுக்குச் சென்று தலைவர்களை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினார்.

 சங்கரலிங்கனார் கரூர், திருச்சி முகாம்களிலிருந்து சத்தியாக்கிரக இயக்கத்தை நடத்தினார். திருச்சி சத்தியாக்கிரகப் போராட்ட வழக்கில் ஆறு மாதங்கள் கடுங்காவல் தண்டனையும், கரூர் வழக்கில் ஆறு மாதங்கள் கடுங்காவல் தண்டனையும், ரூ.50 அபராதமும் விதிக்கப்பட்டது. திருச்சி மத்திய சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்தார்.

அவருக்குச் சொந்தமான இரண்டு வீடுகளையும், அவர் சேமித்து வைத்திருந்த ரூபாய் நான்காயிரத்தையும் விருதுநகர் சத்ரிய மகளிர் உயர்நிலைப்பள்ளிக்கு 1952 ஆம் ஆண்டு நன்கொடையாகக் கொடுத்தார்.

அந்தத் தொகையிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு, பள்ளியில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவாக உப்பில்லாக் கஞ்சி ஊற்ற வேண்டும் என்ற ஒரு திட்டத்தை ஏற்படுத்தினார்.

 தியாகி சங்கரலிங்கனார் பழம்பெரும் காங்கிரஸ் தியாகி; நாட்டின் சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். நம் தாய்த் தமிழகத்துக்கு 'மதராஸ்' என்னும் பெயர் இருத்தல் கூடாது; ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைக்க வேண்டும் என உளமார விரும்பினார்.

 தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை முன்னிட்டு 27.07.1956 ல் விருதுநகர் தேசபந்து திடலில் “உயிர் பெரிதன்று – மானமே பெரிது” என்ற இலட்சியப் பயணத்தை தொடர்ந்தார்.

கொண்ட கொள்கைக்காக தொடர்ந்து 76 நாட்கள் பட்டினி போராட்டம் நடத்தி 13 10 1956 ஆம் தேதி உலக சரித்திரத்தில் இடம் பிடித்தார்...ஆனால் அவரது இலட்சிய பயணத்தை இளைய தலைமுறைக்கு யாரும் கொண்டு செல்ல வில்லை என்பது வேதனை.

எங்களது நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் விருதுநகரில் தியாகி சங்கரலிங்கநாடாருக்கு மணிமண்டபம் கட்டி திறந்துவைத்தார்கள்......

தமிழகத்தின் ஒப்பற்ற தியாகி சங்கரலிங்கநாடாரின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்.தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகத்திற்கு தியாகி சங்கரலிங்கனார் திறந்த நிலை பல்கலை கழகம் என பெயர் சூட்ட வேண்டும் என தமிழ்நாடு நாடார் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

என்றும்
சமுதாய பணியில்
ஜெ.முத்துரமேஷ்நாடார்
தலைவர்
தமிழ்நாடு நாடார் சங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக